வடசேரி பஸ் நிலையத்தில் இளம் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்த போலீஸ்காரரை, பயணிகள் சுற்றி வளைத்து பிடித்து புறக்காவல் நிலையத்தில் வைத்து பூட்டினர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த, பட்டாலியன் போலீஸ்காரர் ஒருவர் நேற்று முன் தினம் அரசு பஸ்சில் நாகர்கோவில் வந்தார். சீருடையில் இருந்த அவர், வடசேரி பஸ் நிலையத்தில் இறங்கியதும் அதே பஸ்சில் வந்த ஒரு இளம் பெண்ணை பின் தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார்.
போலீஸ்காரரின் இந்த செய்கையை எதிர்பார்க்காத இளம் பெண் கையில் இருந்த பொருட்களை எறிந்து விட்டு அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, மற்ற பயணிகள் திரண்டனர். அப்போது போலீஸ்காரர் இளம்பெண்ணை விட்டு விட்டு தப்பிக்கமுயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பயணிகள், வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்று பூட்டி வைத்தனர். பின்னர் வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று, அந்தபோலீஸ்காரரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்து விட்டு, எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர் ஒருவரே சீருடையில் இருந்தபோது, இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்வதுடன், ஒழுங்கனமற்ற முறையில் நடந்து கொண்ட போலீஸ்காரர் மீது துறைரீதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி உள்ளனர்.
0 Comments