தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று, வெள்ளிக்கிழமை, முதல் உயர்கிறது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு.
குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10-ம், ஆஃப் ரூ.20-ம், ஃபுல் ரூ.40-ம் கூடியுள்ளது.
பீர் பாட்டிலும் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 கொடுத்து மது பிரியர்கள் வாங்க வேண்டும். மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக ரூ.2,200 கோடி கிடைக்கும்.
கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 31,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் மட்டும் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.606 கோடி வருவாய் கிடைத்தது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். புத்தாண்டில் தமிழகம் முழுவதும் மது விற்பனை மூலம் ரூ.315 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
0 Comments