பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "வணக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களே மற்றும் நிர்வாகிகளே, சகோதர சகோதரிகளே, நாகர்கோவிலுக்கு நான் வந்திருப்பதால் இந்த மண்ணின் நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, செண்பகராமன் பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார், கே.காமராஜர், மார்ஷல் நேசமணி ஆகியோரது மண்ணில் நான் நிற்கிறேன்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், அருள்மிகு நாகராஜா கோவில்,திருவள்ளுவர் சிலை,சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை உலக மக்களை கவர்ந்துள்ளது.
இன்று புனித வெள்ளி ஜூசசின் தியாகத்தையும்,அவர் எளிய மக்களுக்கு ஆற்றிய பணியையும் நினைவுகூருகிறேன்.
உங்கள் ஆசிகளை நாடி நான் வரும்போது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அரசாக வலுவான சாதனைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளோம். தீர்க்கப்படாத பல சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் தணுஷ்கோடி ரயில் நிலையம் 1964 ஆண்டு சேதமடைந்தது. ஐம்பது ஆண்டுகளாக அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதை சரி செய்ய நமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல சேதமான பாம்பன் பாலத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மும்பை கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. அவர்களது கவனம் எல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.டெல்லியின் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னமாக அமைக்க பல ஏக்கர் இடத்தை எடுத்தார். ஆனால் நாங்கள் அப்துல்கலாம் நினைவிடத்தை ராமேஸ்வரத்தில் அமைத்தோம்.
கருணாநிதியின் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியவர்கள், மகுடம் சூட்டி கொண்டு வந்த இளவரசரை பார்த்து மன புழுக்கத்தில் உள்ளனர். தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது. தகுதி பார்க்காமல் உறவு என்ற நிலையில் பதவி கொடுப்பதால் மக்கள் எதிர்கட்சியினரை ஜனநாயக விரோதியாக பார்க்கிறார்கள். நம் நாட்டின் 356 சட்டப் பிரிவை காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகள் பலமுறை காங்கிரஸால் கலைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் இணைந்து, அனைவரின் நம்பிக்கையையும் பெற்று, அனைவரும் உயருவோம் என்பது தான் எங்கள் சித்தாந்தம். எல்லா மக்களுக்கு உதவும் எண்ணம் அரசுக்கு உள்ளது. என்ன ஜாதி, இனம் என பார்க்காமல் அரசு உதவி செய்கிறது. ஈரானில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த நர்சுகளை மீட்டோம். பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானின் 18 மாதங்களாக பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் உயிருடன் வருவார் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் பாதுகாப்பாக வீடு வந்தார். அவரது சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணன் உயிரோடு இருப்பதாக சொன்னேன். நான் பேசியதையும், அண்ணன் உயிரோடு இருப்பதையும் நம்பும் மனநிலையில் அவர் இல்லை. அந்த அளவுக்கு பாதித்திருந்தார்.
மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் மோதலை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். அன்பில் நம்பிக்கை கொண்ட நாம் அன்பு செலுத்துவோம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் வந்தது. பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கினர். வந்தே பாரத் திட்டம் மூலம் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் மக்களை அழைத்து வந்தோம். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என பார்க்காமல் இந்தியர்களாகவே பார்த்தோம்.
இங்கு மூன்று முக்கிய அம்சங்கள் பற்றி பேச நினைக்கிறேன். செழிப்பான பண்ணைகள், வளமான தொழிற்சாலைகள், கடற்கரை மேம்பாடு ஆகியவை தான் நம் திட்டம்.
நம் ஆட்சியில் கொப்பரை தேங்காய்க்கான விலை கடந்த ஆட்சியை விட அதிகம் வழங்குகிறோம். விவசாயிகளின் வருமானத்தை கூடிய விரைவில் இரட்டிப்பாக்க தீவிரமாக வேலை செய்து வருகிறோம். வணிக சமூகங்ககுக்கு, குறிப்பாக சிறு,குறு நிறுவனங்களுக்கு சிறப்பான உதவிகள் செய்து வருகிறோம்.பாரம்பரிய தொழில்களை ஊக்கப்படுத்துகிறோம்.உள்ளூரில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், பனை ஓலையில் செய்யப்படும் பொருட்கள், கோயில் ஆபரணங்கள் ஆகியவை நாஞ்சில் மண்ணின் சிறப்பு. இவை விரைவில் உலக அளவில் பிரபலமடைய போகிறது.
முந்தைய அரசு கடலோர பகுதியை பற்றி கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்ய மூன்று அடிப்படை திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நவீன உள் கட்டமைப்பு வளர்ச்சி, புதிய துறைமுகங்களை அமைத்தல். நம் துறைமுகங்கள் வளர்ச்சியடையப் போகின்றன. நீல பொருளாதாரம் என்ற கடல் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் தருவதால் மீனவர்களின் வருவாய் அதிகரிக்கும். புதிய மீன்பிடி துறைதுறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில் சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம்.மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பே நம் அரசின் முன்னுரிமை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 40 மீனவர்களையும் நான்கு படகுகளையும் மீட்டு வந்தோம். எந்த ஒரு மீனவரும், படகும் இப்போது இலங்கை அரசின் காவலில் இல்லை.
மூன்றாவதாக மீன் விற்க நிறைய தடைகள் உள்ளன. சிறந்த சாலை, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் தடைகளை நீக்க சாத்தியபடும் இடங்களில் சாலை நீர்வழிகளும் அமைக்கப்படும். மீனவர்கள் வாழ்க்கை எளிதாகவும், வளமாகவும் இருக்கும். மீனவர்களுக்கு மீன்பிடித்திட்டங்களும், உணவு பதப்படுத்தும் திட்டங்களும் அமைக்கப்படும். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் மூலம் மீனவர்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கூட்டத்துக்கு திரளாக வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. வரும் 6-ம் தேதி எங்களை ஆசீர்வதியுங்கள். என் தோழர் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை அன்றைய தினம் ஆசீர்வதியுங்கள். அவருடன் நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.அவர் நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்கக் கூடியவர். எனவே அவரை வெற்றிப் பெற செய்யுங்கள்" என்றார்.
தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ. 1லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது
குமரி - மும்பை இடையே பொருளாதார வழித்தடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
புதிய துறைமுகங்கள் கட்டப்பட உள்ளன. இதனால், உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும்
சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. கடல்சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மீனவர்கள் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments