மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருடைய மனைவி செலின் மேரி(வயது 55). இவர்களுடைய மகன் விஜி, உடல்நல குறைவால் சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக செலின் மேரி, அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மகனை பார்த்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொது, கொட்டில்பாடு பகுதியில் வைத்து செலின்மேரியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. உடனே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. 2 பேரும் ரோட்டில் விழுந்தனர். இதில் செலின்மேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரேம்குமார் லேசான காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் செலின்மேரியை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செலின்மேரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments