நாகர்கோவில் மேலபுத்தேரி ஆணை பொத்தையை சேர்ந்தவர் மாரிமுத்து, இவர், அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மாரிமுத்து நேற்று காலையில் தன் மகள் மற்றும் தாயாருடன் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். நுழைவு வாயில் முன் வந்ததும் தன் தாயார் மற்றும் மகளை தனியாக நிற்க சொல்லி விட்டு, பின்னர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்த போலீசார் பதறி அதிதி ஓடி வந்து மாரிமுத்துவை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றது பற்றி மாரிமுத்துவிடம் கேட்டபோது கூறியதாவது:-
என் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இது தொடர்பாக என் மனைவியின் தாயாரிடம் நான் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் கூறாமல் பொள்ளாச்சி சென்றுவிட்டார். மேலும் குழுவில் கடனாக பெற்று வைத்திருந்த பணத்தையும் அவர் திருடி சென்றுவிட்டார். இதுபற்றி நான் ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நான் வேலை காரணமாக கீழ கலுங்கடிக்கு சென்றேன். அப்போது 2 பேர் என்னை வழிமறித்து, என் மனைவி விஷயத்தில் தலையிட கூடாது என்று கூறி என்னை தாக்கினார்கள். இதனால் செய்வதறியாது நான் 2 நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் லாட்ஜில் தங்கி இருந்தேன்.
என் மனைவி மற்றும் அவருடன் தகாத உறவில் ஈடுபட்டு உள்ள நபர் மூலமாக எனக்கும், என் மகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக தான் என்ன செய்வது என்று தெரியாமல் தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனவே என்னையும், என் மகளையும் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக அவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுவும் அளித்தார். பின்னர் மாரிமுத்துவை வடசேரி போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு பரபரப்பு முடிவுக்கு வந்தது.
0 Comments