மனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்தான் காரணம் என குமரி வாலிபர் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பதிவை மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் முகநூலில் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான், ஓட்டல் மேனேஜ்மெண்டுக்கு படித்து உள்ளேன். 2008-ம் ஆண்டு மண்டைக்காடு கோவில் திருவிழாவுக்கு சென்ற போது, தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பார்த்தேன். அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு திரும்பி வந்தோம்.
ஆனால் என் வீட்டார் எங்களை ஏற்கவில்லை. இதனால் மனைவி வீட்டுக்கு சென்று தங்கினோம். எனக்கு 2009-ம் ஆண்டு மகன் பிறந்தான். அதன்பிறகு 2013-ம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றேன். அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறேன். அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு என் தந்தை ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை என் குடும்பத்தினர் ஏற்று கொண்டனர்.
இந்த நிலையில் என் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு வந்தேன். ஆனால் என் மனைவியை பிரிய எனக்கு விருப்பம் இல்லை. எனவே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்தேன். அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
அதன்படி அங்கு விசாரணைக்கு சென்றேன். அப்போது என் மனைவியும் அங்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசாரித்த போது என் மனைவிக்கும், தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியருக்கும் கள்ள தொடர்பு இருப்பதும், அதனால் கர்ப்பமானதும் தெரிய வந்தது.
எனவே என்னுடைய மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, என்னிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் நான் வெளிநாட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து மனைவிக்கு அனுப்பிய பணம், 55 பவுன் நகை மற்றும் அவர் பெயரில் உள்ள 2¾ சென்ட் நிலம் ஆகியவற்றையும் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் என் மனைவியின் கர்ப்பத்தை கலைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். எனவே அதை யாரும் செய்யக்கூடாது என்று கேட்டு கொள்கிறேன். என்னிடம், மகனை ஒப்படைக்க முகநூல் நண்பர்கள் உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
0 Comments