குமரி மாவட்டம் பொற்றையடி அருகே உள்ள மருந்துவாழ் மலையில் பல முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்துவருகின்றனர். மருந்துவாழ் மலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. அதனை பறித்து மருந்தாக்க பல நாட்டு வைத்தியர்களும் வந்து பறித்து செல்வது வழக்கம். இந்நிலையில் மருந்துவாழ் மலையில் உள்ள இரு பாறைகளின் இடையே இருந்து துர்நாற்றம் வீசுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விரைந்து சென்ற வன துறையினரும், போலீசாரும், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவரின் உடல் மூன்று நாட்களாக அழுகிய நிலையில் காணப்பட்டது. அவனது சட்டைப்பையில் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தது. மேலும் செல்போன் நம்பரை வைத்து விசாரித்தபோது இறந்து கிடந்த வாலிபர் பெயர் சுபாஷ் ஆனந்த் (21), திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் அருகே உள்ள பிள்ளையார் குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் என்றும் தந்தை பாக்கிய மணி இறந்துவிட்டார். தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் வசித்து வந்துள்ளார்.
இவர் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரபல தனியார் ஸ்டுடியோவில் வீடியோ, போட்டோ ஆல்பம் டிசைனர் ஆக இருந்துள்ளார். இதற்கிடையில், சுபாஷ் ஆனந்த் மூன்று நாட்களாக காணவில்லை என பழவூர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்துள்ளது தெரியவந்தது. மேலும் இவரதுசெல்போனில் உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உட்பட அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இவரது காதல் விவகாரம் காதலியின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் அவர்கள் ஏதேனும் மிரட்டினார்களா?. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments