அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க பாடுபட்டு கொண்டிருக்கும் காலத்தில், வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் ஊராட்சி தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்து அதிசயம் நிகழ்த்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம்.
இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என தனசேகர் விரும்பினார்.
வழூர் அகரம் ஊராட்சியில் செல்வியும், பஞ்., தலைவராக இருந்துள்ளார். தனசேகர், தனது இரண்டு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு இரு ஊராட்சியிலும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டிச.,30ல் நடந்த தேர்தலின் பதிவான ஓட்டுகள் நேற்று (ஜன.,02) எண்ணப்பட்ட நிலையில், இரு ஊராட்சிகளுக்கும் முடிவுகள் வெளியானது.
இதில், இரு மனைவிகளும் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படவே, தனசேகர் படுகுஷி-ஆனார். மனைவிகளுக்கு மாலையிட்டு ஊர் முழுவதும் மகிழ்ச்சியுடன் வலம் வந்ததை பார்த்து மற்ற கணவன்மார்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டதாக அந்த ஊர் பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
0 Comments