சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டுவந்த பணத்துடன் மாயமான வேன் ஓட்டுநர் அன்புரோஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் திருடிச் சென்ற 52 லட்சம் ரூபாயில், 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவரது உறவினர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அதிகளவில் பணத்தை பார்த்தப்போது ஆசையை கட்டுப்படுத்தமுடியாமல் அதனை திருடினேன் என கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அன்புரோஸ் மீது பல இடங்களில் செயின் பறிப்பு தொடர்பான வழக்கு உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பணத்தை கொண்டுச் சென்றப்போது துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் வரவில்லை என்றும், குறைந்த ஊதியத்திற்கு ஊழியர்கள் கிடைப்பதால் அவர்களின் குற்றப்பின்னணி குறித்து நிறுவனங்கள் விசாரிப்பது இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பணத்தை நிரப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் கூறினர்.
0 Comments