தனது வெள்ளிக்கொலுசை அடமானம் வைத்து மதுஅருந்திய கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற மனைவி!

தனது வெள்ளிக்கொலுசை அடமானம் வைத்து மதுஅருந்திய கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற மனைவி!

in News / Local

விழுப்புரம் அருகே தனது மனைவியின் வெள்ளிகொலுசை திருடி அடமானம் வைத்து மதுகுடித்த கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்லமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(35). கொத்தனார் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா(32) என்பவருடன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. வெற்றிவேல்(12), ஹரீஷ்(10) என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இதனிடையே செந்தில் அடிக்கடி மதுஅருந்தும் பழக்கமுடையவராம். கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சித்ரா, கணவனின் குடிப்பழக்கத்தை கண்டித்ததுடன், எதற்காக வேலைக்குச் செல்லவில்லை என்று கேட்டு கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா கூலிவேலைக்கு வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சித்ரா வைத்திருந்த வெள்ளி கொலுசை எடுத்துக்கொண்டு நகை அடகுக்கடையில் ரூ.1,500க்கு செந்தில் அடமானம் வைத்துள்ளார். அந்தபணத்தை முழுவதுமாக குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் இருந்த செந்திலிடம், வேலைக்குச்சென்று வீட்டிற்கு வந்த சித்ரா குடிக்க பணம் எங்கிருந்து வந்தது என்று தகராறு செய்துள்ளார். பின்னர் சந்தேகமடைந்து தான் வைத்திருந்த கொலுசு இருக்கிறதா? என்று பார்த்தபோது தான் அதை அடகுவைத்து தான் செந்தில் மது அருந்தியுள்ளார் என தெரியவந்தது. இதனால் மிகவும் ஆத்திரமடைந்து கணவரிடம் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்த பைக்கில் பெட்ரோலை பிடித்துக்கொண்டு போதையில் படுத்துக்கிடந்த செந்தில்மீது ஊற்றி தீவைத்துள்ளார். தலை, மற்றும் வயிற்றுப்பகுதி முழுவதுமாக எரிந்துதீக்காயமடைந்தார்.

செந்திலின் அலறல்சத்தம் கேட்டும் அக்கம்பக்கத்தினர் யாரும் உதவிக்கு முன்வரவில்லை. இதனிடையே சிறிதுநேரத்தில் சித்ரா 108 ஆம்புலன்சுக்கு போன்செய்து, அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சித்ராவிடம் விசாரணை நடத்தினர். விழுப்புரம் அருகே கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி மனைவி கொல்லமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top