சென்னை செங்குன்றம் அருகே இரண்டு சுவருக்குள் நடுவில் சிக்கிக் கொண்ட சிறுவன் 2 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
சென்னை செங்குன்றத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்திஷ். (வயது 12) ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ், வீட்டின் முன்பகுதியில் உள்ள சுற்றுச் சுவருக்கும், தூணுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் செல்ல முயன்றிருக்கிறான்.
இந்த இடைவெளியில் புகுந்து நிதீஷால் வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டான். எவ்வளவு முயற்சித்தும் வெளியே வர முடியாததால் பயத்தில் கத்த ஆரம்பித்தார். சிறுவனின் சப்தத்தைக் கேட்டு வீட்டிலிருந்தோர் வெளியே ஓடி வந்தனர். அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பலன் அளிக்காததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தூணின் முன்பகுதியில் லேசாக உடைத்தனர். நித்திஷ் டிரஸைக் கத்தரிக்கோலால் கிழித்து அகற்றினர். இதன்பின் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நித்திஷ் மீட்கப்பட்டார். ஏறக்குறைய மயக்க நிலையில் இருந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்தப் பிறகு தான், இயல்பான நிலைக்கு திரும்பினார். சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அந்தப் பகுதி மக்கள் மனசாரப் பாராட்டியுள்ளனர்.
0 Comments