அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் ஒருவரான அப்துல் நஸீருக்கு, இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவிடமிருந்து கொலைமிரட்டல் வந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ராம்ஜன்ம பூமி வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கிற்கான தீர்ப்பை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட, நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நஸீர், அசோக் பூஷன் வழங்கினர்.
இந்த தீர்ப்பின் படி, அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதிவி உயர்த்தப்பட்ட அப்துல் நஸீருக்கு, ராம்ஜன்ம பூமியின் தீர்ப்பை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவிடமிருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. இதை தொடர்ந்து, அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்றுடன் பதவி ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் வசிக்கவிருக்கும் இவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்குவதாக கடந்த சில நாட்கள் முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments