ஐஎன்எக்ஸ்சுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்- ப.சிதம்பரம் தரப்பு

ஐஎன்எக்ஸ்சுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்- ப.சிதம்பரம் தரப்பு

in News / National

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை கடந்த 20-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்களது தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கோரிய மனு மீது விசாரணை நடை பெற்று வருகிறது.

ஐஎன்எஸ்சுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்து இருந்ததாக நிரூபித்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் வாதாடினார்.

தொடர்ந்து வாதாடிய கபில்சிபல், மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார். ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை.

வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள் என்பதை குறித்து அமலாக்கத்துறை விளக்க வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திற்கு எந்த ஆவணத்தையும் கொடுப்பது அல்லது காண்பிக்காமல் இருக்க முடியாது. அதைப்பார்க்க எனக்கு உரிமை இல்லை, அவர்கள் அதை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அவர்கள், அமலாக்கப்பிரிவு வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு கசியவிட்டனர் என வாதிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும் போது, அமலாக்கப்பிரிவு பிரமாண பத்திரத்தை கசியவிடவில்லை. இது சிதம்பரத்தின் வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட பின்னர் தான் கசிந்தது என்று வாதிட்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top