அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தீர்மானித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல்லாண்டு காலம் நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9ந்தேதி தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், இந்த தீர்ப்பில் அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய தரப்புக்கு ஒதுக்க மத்திய அரசும், உத்தரப்பிரதேச மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் ஆய்வு செய்வது குறித்து விவாதிக்க உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்லாமிய அமைப்பினர், அயோத்தி வழக்கு தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார்.
இந்த தீர்ப்பில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறிய அவர்கள், சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம்தான் தங்களுக்குத் தேவை என்றும், மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்குவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments